தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை ஆளும் கட்சியான அ.தி.மு.க. நிராகரித்துவிட்டது. அந்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடிவருகின்றன.
இந்த நிலையில் தாங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எப்போதும் நண்பனாக இருப்பதாக அ.தி.மு.க. கூறியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக விரோத சக்திகளும் பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களைத் துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
பொய்ப் பிரசாரத்தைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க., இஸ்லாமிய மக்களுக்குச் செய்த சலுகைகளைப் பட்டியலிட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு உதவிட அ.தி.மு.க. துடிப்புடன் செயல்பட்டுவருவதாகவும் இஸ்லாமியர்களுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையிலான உறவைப் பிரிக்க சிலர் முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது.
என்ஆர்சி எனப்படுவது, அசாமிற்கான சட்டம் என்றும் மத்திய அரசுடன் இணக்கமாய் இருந்து தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அ.தி.மு.க. செயல்படுவதாகவும் அக்கட்சி விளக்கமளித்துள்ளது.