மீன் உற்பத்தியில் மண்ணைக் கவ்விய தமிழ்நாடு!

கடந்த ஆண்டில் தமிழகம் 6.7 லட்சம் டன் அளவு மீனை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவின் மீன் உற்பத்தி குறித்து டிசம்பர் 10ஆம் தேதி மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய மீன்வளத் துறை இணையமைச்சரான பிரதாப் சந்திர சாரங்கி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2014-15ஆம் ஆண்டில் 10.26 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி 2018-19ஆம் ஆண்டில் 13.34 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2016-17ஆம் ஆண்டில் 11.43 மில்லியன் டன், 2017-18ஆம் ஆண்டில் 12.59 மில்லியன் டன் என்ற அளவில் இந்தியாவின் மீன் உற்பத்தி அதிகரித்திருக்கிறது.


இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக, ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 3.99 மில்லியன் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 1.77 மில்லியன் டன்னுக்கும், குஜராத்தில் 7.2 லட்சம் டன்னுக்கும், கேரளாவில் 7.1 லட்சம் டன்னுக்கும், ஒடிசாவில் 7.3 லட்சம் டன்னுக்கும் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19ஆம் ஆண்டில் மீன் உற்பத்தி அளவு 6.7 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் 6.8 லட்சம் டன் மீன் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.